வருமான வரி உச்ச வரம்பை, நிதிநிலை அறிக்கையில் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜூலை 5-ஆம் தேதி திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத வருவாய்ப் பிரிவினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பதுதான்.
நடப்பாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அப்போதைய பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு மட்டும் வருமானவரி விலக்கு அளித்தார். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுவோருக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. அதேபோல், வருமானவரி விகிதமும் மாற்றியமைக்கப்படவில்லை. அதுபற்றி அப்போது பியுஷ் கோயலிடம் கேட்டபோது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது வருமானவரி தொடர்பான மக்களின் அனைத்து நியாயமான எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன் நிதியமைச்சர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதம் என்ற அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்றவாறு மாத ஊதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு வருமானவரி விலக்கு உச்சவரம்பும் ஆண்டுதோறும் தானாக உயர வகை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.