விருதுநகர் நான்குவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சென்ற அரசுப் பேருந்தின் பின்புறமாக கார் மோதிய விபத்தில், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி அருகே ஜல்லிபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (75), இவரது மனைவி கமலம் (70) மற்றும் உறவினரான சேகர் (52) ஆகியோர், திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பேரக் குழந்தையை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். காரை உறவினரான அய்யப்பன் (53) என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நான்கு வழிச் சாலையில் உள்ள விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரே பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டுச்சென்றது. அப்போது, அய்யப்பன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சுப்பிரமணியன், அவரது மனைவி கமலம் மற்றும் சேகர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த அய்யப்பன் முதலுதவிக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து நடைபெற்ற இடத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன் பார்வையிட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.