பாலியல் புகார்: அறநிலையத் துறை இணை ஆணையர் கைது
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அறநிலையத் துறை விடுதி குளியலறையில், பெண் அதிகாரியை விடியோ எடுப்பதற்காக கேமரா பொருத்தி வைத்திருந்த இணை ஆணையரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜய்சங்கர் மனைவி அனிதா (40). இவர், திண்டுக்கல் இந்துசமய அறநிலையத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர், மதுரை சரக காவல் துறை தலைவரிடம் அளித்த புகார் விவரம்: கடந்த ஜூன் 6 -ஆம் தேதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பணி செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சென்று, அங்குள்ள அறநிலையத் துறை விடுதியில் தங்கியிருந்தேன். உண்டியல் பணம் எண்ணும் பணி வழங்கப்பட்டிருந்தது. குளியலறைக்குச் சென்ற நான், உள்ளே பென் கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
அப்போது, அங்கு தங்கியிருந்த அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன்தான் குளியலறையில் என்னை விடியோ எடுப்பதற்காக செல்லிடப்பேசி மற்றும் பென் கேமராவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, இணை ஆணையர் பச்சையப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் பச்சையப்பனை வியாழக்கிழமை கைது செய்தனர். பேரையூர் துணைகண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் சர்ச்சையில் பச்சையப்பன்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மீது, கோயில் உண்டியல் திறப்பின்போது பணத்தை எடுத்தார் என்ற புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை எல்லீஸ் நகர் அலுவலகத்தில் பிரம்மாண்டமாகக் கொண்டாடி கீழ்மட்ட அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி வரவழைத்து பரிசுகளைப் பெற்றார் என்றும், அறநிலையத் துறையின் பணி நியமனங்களிலும் லட்சக்கணக்கில் பணம் பெற்றார் என்பன உள்ளிட்ட புகார்களில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.