மழையா, எப்போ? எங்கே? என்று கேட்பவர்களுக்கு பதில் தயார்.. பதிலைப் படித்து மகிழ்ச்சி அடைய நீங்கள் தயாரா?
காவிரி நீர்பிடிப்புப் பகுதியான தலைக்காவிரி பகுதியில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த முதல் மழை பெய்துவிட்டது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, கடைசியாக காவிரி நீர்பிடிப்புப் பகுதியான தலைக்காவிரியில் நேற்று 147 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, கேரளாவின் வயநாட்டில் உள்ள பூக்கோட் பகுதியில் 189 மி.மீ. மழையும், நீலகிரி, வால்பாறை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதேப்போல, இனி வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
குடகுப் பகுதியில் மழை
தலைக்காவிரிப் பகுதியில் முதல் முறையாக இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் 147 மி.மீ. மழை பெய்துள்ளது. குடகுப் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்தும் உருவாகியுள்ளது.
சிக்மகலூரிலும் சிந்திய மழை
முடிகேரியிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. அங்கு நேற்று 148 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கேஆர்எஸ் அணைக்கு மேல் உள்ள ஹேமாவதி அணைக்கும் இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வயநாடு பகுதியில் மாமழை
கேரள மாநிலம் வயநாட்டின் பூக்கோட் பகுதியில் 189 மி.மீ. மழை பெய்துள்ளது. தரியோடு பகுதியில் 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்.
நீலகிரியை மறக்காத மழை
நமது சொந்த மண்ணான நீலகிரியில் 100 மி.மீ. மேல் மழை பெய்துள்ளது. இங்கு நேற்று 154 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வால்பாறைக்கு கரிசனம் காட்டிய மழை
பெரியகல்லாற் பகுதியில் 100 மி.மீ. மழையும், சின்னக்கல்லாறில் 72 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்திருக்கும் மழையாகும்.
கன்னியாகுமரி, தேனி பெரியார் பகுதிகளிலும் மழை தலைகாட்டியுள்ளது.
ஜூலை 8ம் தேதி முதல் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உண்டு. 9ம் தேதிக்குப் பிறகு தான் ஒரிஜினல் டமால் டுமீல் ஆரம்பம். இந்த தேதி பல நாட்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த தேதியில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, தமிழகத்துக்கு ஒரு நல்ல மழை வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக அழகாகச் சொல்வது என்றால், தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியும் ஒரே நேரத்தில் மழையைப் பெறவிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.