பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்:முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
 தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி: பிரிந்து சென்றோர் ஒன்றாக இணைந்து, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், நானும் அழைப்பு விடுத்தோம். அதை ஏற்று, பல்வேறு கட்சிகளிலிருந்து பலரும் விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம்.
 பிரதமரை அண்மையில் சந்தித்தபோதுகூட இதுதொடர்பாக கோரிக்கை வைத்தோம். ஆனால், இன்னும் அது நிறைவேறவில்லை. சேலம் இரும்பு உருக்காலை பிரச்னை ஒரு பொதுப் பிரச்னை. பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரியும் அப்பொது நிறுவனம் தனியாரிடம் தாரைவார்க்கப்படுவதைத் தடுக்க, எவ்வித மனமாச்சரியமும் இல்லாமல் அனைவரும் இணைந்து குரல் கொடுத்துள்ளோம். பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தால் மக்களுக்கு செளகரியமாக இருக்கும். அதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். காவிரி-கோதாவரி இணைப்புக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்துக்கு ஏற்கெனவே மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அறிக்கை தயாராகி எவ்வளவு நிதி தேவைப்படும் எனக் கணக்கிட்ட பிறகுதான், இதுதொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com