ஓய்வுபெற்ற அலுவலர்கள் மறுநியமனத்தை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறுநியமனம் செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து 896 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த அரசாணையை ரத்து வேண்டும்' என கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மறுநியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாதது பணி விதிகளுக்கு முரணானது. எனவே, தற்போது பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் ஆகியோர் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.