தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆதரவில் 22-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி, நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நெய்வேலி புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து குறும்படப் போட்டி, கட்டுரை மற்றும் சிறுகதைப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இதன்படி, நிகழாண்டு நடத்தப்பட்ட குறும்படம், கட்டுரைப் போட்டிகளுக்கான முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.
இதேபோல, சிறுகதைப் போட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் வரப்பெற்றன. இதற்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரம் வருமாறு:
முதல் பரிசு (ரூ.10,000) பெறும் சிறுகதை - "நிவேதா நீட் எழுதுகிறாள்', எழுதியவர் கும்பகோணம், ஆதலையூரைச் சேர்ந்த சூரியகுமார்.
இரண்டாம் பரிசு (ரூ.5,000) பெறும் சிறுகதை - "அவர் வருவாரா...', எழுதியவர் விருத்தாசலம் அருகே ஊத்தங்கால் பகுதியைச் சேர்ந்த ப.கோவிந்தராசு.
மூன்றாம் பரிசு (ரூ.2,500) பெறும் சிறுகதை - "மாற்றொலி', எழுதியவர் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த நா.கோகிலன்.
ஆறுதல் பரிசு (ரூ.1,250) பெறும் 5 சிறுகதைகள்: ஆரணியைச் சேர்ந்த பவித்ரா நந்தகுமார் எழுதிய "பூரணியும், கொலு போட்டியும்', திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்ரா எழுதிய "வதை', நெய்வேலியைச் சேர்ந்த மு.பாண்டியன் எழுதிய "புரிதல்', திருவாரூரைச் சேர்ந்த ரோஷிணி (எ) தீபப்பிரியா எழுதிய "அறம்', தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த மா.இராமச்சந்திரன் எழுதிய "களத்துக்கடை கருத்தையா'.
சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறும் விழாவில் "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் பரிசுகளை வழங்குகிறார்.