எம்பிபிஎஸ், பிடிஎஸ்: சிறப்புப் பிரிவினர் 48 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு: இன்று முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட  சிறப்புப் பிரிவினர்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள்.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட  சிறப்புப் பிரிவினர்  48 பேருக்கு வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அந்த இடங்களைத் தவிர்த்து சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் அனைத்தும் பொதுப் பிரிவுக்கு வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவை பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.  பொதுவாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு மொத்த இடங்களில் 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு 7 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடமும் ஒதுக்கப்படுகின்றன. ராணுவ வீரர்களின் வாரிசுகளை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு 10 எம்பிபிஎஸ் மற்றும் ஒரு பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த பிரிவுகளைச் சேர்ந்த 123 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்குமாறு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் 81 மாணவர்கள், தங்களது பெற்றோர், உறவினருடன் கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். 
அவர்கள் அமருவதற்காக  அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. காத்திருப்பு பகுதியில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு காலி இடங்கள் குறித்த அறிவிப்பு உடனுக்குடன் காட்சிப்படுத்தப்பட்டு வந்தன. முன்னதாக, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை மருத்துவக் குழுவினர் பரிசோதித்த பிறகே அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.  முதல் நாள் கலந்தாய்வு முடிவில் 46 எம்பிபிஎஸ் இடங்களும், 2 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின.
சிறப்புப் பிரிவில் மீதமுள்ள இடங்கள் அனைத்தும் பொதுப் பிரிவில் சேர்க்கப்பட உள்ளன.
பொதுப் பிரிவு கலந்தாய்வு: இதனிடையே, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு (ஜூலை 9)  செவ்வாய்க்கிழமைகாலை 9 மணிக்கு தொடங்குகிறது. அதில் பங்கேற்க 103 மாணவர்களுக்கு (நீட் மதிப்பெண் 685 முதல் 610 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com