முதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான டான்செட் தகுதித் தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
முடிவுகளை annauniv.edu/tancet 2019 என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான டான்செட் தகுதித் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் நடத்தியது.
இதில், எம்பிஏ படிப்பில் சேர 21,743 பேர், எம்.சி.ஏ. படிப்பில் சேர 6,004 பேர், முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர 14,193 பேர் என மொத்தம் 41,940 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் எம்பிஏ சேருவதற்காக விண்ணப்பித்தவர்களில் 16,473 பேரும், எம்சிஏ படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் 4,674 பேரும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களில் 10,374 பேரும் என மொத்தம் 31,521 பேர் தகுதித் தேர்வை எழுதினர்.
இவர்களுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து புதன்கிழமை (ஜூலை 10) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.