நடிகர் சங்கத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி மறுப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ஆம் தேதி நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. 
இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தன்னை வாக்களிக்க அனுமதிக்காததால், நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதே போல, பெஞ்சமின் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக உரிமையியல்  நீதிமன்றத்தில்தான் வழக்குத் தொடர முடியும் என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு மனுதாரர் தரப்பில் திரும்பப் பெறப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com