வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: ஜூலை 12 -இல் முதல்கட்ட கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 12 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 12 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 11 பட்டப் படிப்புகளில் உள்ள 3,905 இடங்களுக்கு, 2019-20 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 51,876 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
 அவர்களில் 41,590 பேர் உரிய கட்டணம் செலுத்தி, போதிய விவரங்களை சமர்ப்பித்திருந்தனர். இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 12 -ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 15 -ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.
 இதில் பங்கேற்றவர்களுக்கு கல்லூரி வாரியான பாடப் பிரிவு ஒதுக்கீடு ஜூலை 19 -இல் நடைபெறும். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 23 முதல் 25 வரை நடைபெறும். 
இதையடுத்து முதல்கட்ட விருப்ப அடிப்படையிலான நகர்வு முறை நடைபெறும். இதையடுத்து இரண்டாம் கட்ட விருப்ப அடிப்படையிலான நகர்வு முறை நடைபெறும். இதில் பங்கேற்பவர்களுக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி கல்லூரி வாரியான பாடப் பிரிவு ஒதுக்கப்படும். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 8, 9 -ஆம் தேதிகளில் நடைபெறும். சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 12 -ஆம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொழில் நிறுவன உபயதாரர் பிரிவுக்கான கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை ஆகஸ்ட் 6 -ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
 இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பிறகு ஆகஸ்ட் 21 -ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஆகஸ்ட் 31 -ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 அதேபோல பட்டயப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28 முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இதில் பங்கேற்பவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் செப்டம்பர் 5 -ஆம் தேதிக்கு முன்பு நேரில் ஆஜராக வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 11, 12 -ஆம் தேதிகளில் நடைபெறும். 
இதில் பங்கேற்பவர்கள் செப்டம்பர் 16 -ஆம் தேதிக்கு முன்பு நேரில் ஆஜராக வேண்டும். பட்டயப் படிப்புகளுக்கு செப்டம்பர் 16 -ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com