காரைக்குடி: விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்வது போல விடியோ எடுத்து சமூக தளங்களில் பரவவிட்டு நாடகமாடிய பெண்ணுக்கு நீதிபதி மிக விநோதமான தண்டனையை வழங்கியுள்ளார்.
காரைக்குடியில் கார்த்திகா என்ற பெண் கடந்த மாதம் தற்கொலை செய்து கொள்வது போன்ற விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் பணியாற்றும் இடத்தில் பாலியல் தொல்லைகொடுப்பதாகவும், கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வசனம் பேசிவிட்டு, விஷம் அருந்துவது போன்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதைப் பார்த்த காவல்துறை எஸ்.ஐ. தினேஷ், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போதுதான், கார்த்திகா சோப் ஆயிலை, விஷம் என்று கூறி குடித்துவிட்டு தற்கொலை செய்வது போல் நாடகமாடியது தெரிய வந்தது. இது குறித்து காரைக்குடி குற்றவியல் நீதித்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடிய கார்த்திகாவுக்கு நீதிபதி ஒரு விநோத தண்டனையை அளித்தார். அதாவது, அரசு மருத்துவமனையில் ஒரு மாத காலத்துக்கு தினமும் சென்று, அங்கே தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை கார்த்திகா விளக்க வேண்டும் என்று என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையோ, அபராதமோ ஒருவரது மனதை மாற்றுமா என்று தெரியவில்லை. ஆனால் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோரை தினமும் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை அளிக்கும் போது நிச்சயம் அது ஒரு சிறந்த மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.