வேலைவாய்ப்பற்ற பெண்கள், ஆதிதிராவிடர்களுக்கு சுயதொழில் முனைவதற்கான பயிற்சி ரூ.100 கோடி செலவில் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் நிலோபர் கபில் வெளியிட்ட அறிவிப்புகள்:
படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயதுக்குள்பட்ட பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் முனைவதற்கான குறுகிய கால திறன் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முன்னணி தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக ரூ.100 கோடி செலவில் வழங்கப்படும். 53 அரசு தொழில் பயிற்சி நிலையங்களுக்கு மின்சார வாகனங்கள் ரூ.4.77 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும் என்றார்.