சென்னை விமான நிலைய ஓடுதளம் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் கடந்த வாரம் ஆய்வு நடத்தியது. அப்போது சென்னை மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆமதாபாத் விமான நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும் பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், சென்னை விமான நிலைய ஓடுதளத்திற்கு அருகே வெள்ளத் தடுப்புகாக மேம்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் திறந்திருந்தது, டாக்சி வே' நீட்டிப்பு மற்றும் புதிய விமான நிலையக் கட்டுமானப் பணிகளால் ஏற்பட்ட மண், கற்கள் போன்றவை ஓடுதளத்தில் கிடந்ததாகவும் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இரு ஓடுதளங்களுக்கும் இடையிலான பாதையில் விமானச் சக்கரங்களில் இருந்து வெளியான ரப்பர் கழிவுகள் சரிவர அகற்றப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ரப்பர் கழிவுகளால், விமானம் ஓடுதளத்தை விட்டு சறுக்கிச் செல்லக்கூடிய ஆபத்தையும், விமானம் புறப்படும் போது கழிவுகள் உள்ளிழுக்கப்பட்டு எஞ்சினில் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மழைக் காலத்தில் விமானங்களை இயக்கும்போது 6 விபத்துகள் நேரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலைய இயக்குநர் சந்திர மவுலி மற்றும் ஆமதாபாத் விமான நிலைய இயக்குநர் மனோஜ் கங்கல் ஆகியோருக்கு விமான போக்குவரத்துத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 15 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.