கனிமச் சுரங்கங்களுக்கு தமிழகத்திலேயே சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் இன்பசேகரன் பேசும்போது, தமிழகத்தில் கனிமச் சுரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடப்பதாகக் கூறினார்.
அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு கூறியது:
மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதி இல்லாமலும் கனிமச் சுரங்கங்கள் இயங்கக்கூடாது என்று 2012-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அனுமதியில்லாமல் இயங்கி வந்த 1099 கனிமச் சுரங்கங்கள் தமிழகத்தில் மூடப்பட்டன. அதேப்போல் இந்தியா முழுவதும்கூட கனிமச் சுரங்கங்கள் மூடப்பட்டன.
கனிமச் சுரங்கங்கள் இயங்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்துதான் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்ததன்பேரில், தமிழகத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவிடமே அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மூடப்பட்டுள்ள கனிமச் சுரங்கங்களைச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவிடம் அனுமதி பெற்று இயக்கலாம் என்றார்.