குன்னூர் அருகே ட்ரூக் தனியார் தேயிலை எஸ்டேட் பகுதியில் வியாழக்கிழமை காட்டெருமைகள் புகுந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக ட்ரூக் பகுதியில் தனியார் எஸ்டேட்கள் உள்ளன. வனத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. வியாழக்கிழமை காலையில் ட்ரூக் எஸ்டேட் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் கூட்டமாக தேயிலைத் தோட்டத்தில் உலா வந்தன. இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பணியை நிறுத்திவிட்டு வெளியேறினர். காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் தொழிலாளர்கள் மீண்டும் பணிகளை மேற்கொண்டனர்.