நதிநீர் இணைப்பு மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என அமமுகவின் பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வீரன் அழகுமுத்துக் கோன் 262-ஆவது குருபூஜை விழாவில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமமுகவை விமர்சித்தவர்கள் எங்கள் கட்சியின் நிர்வாகிகளைத் தேடி போய் தங்களது கட்சியில் இணைத்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். நீட் தேர்வினால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு தகர்ந்துள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கான நீரைப் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க முன் வர வேண்டும். தற்போதைய நிலையில் தண்ணீர் பிரச்னைக்கு நதிநீர் இணைப்பு மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்றார்.