கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சித்து வரும் பாஜவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் ஆட்சியைச் சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஏதோ ஒரு வகையில் பாஜக ஆட்சி அமைய வேண்டுமென்று ஜனநாயக விரோதப் போக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்து வரும் பாஜகவைக் கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலும் சனிக்கிழமை (ஜூலை 13) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் (கே.எஸ்.அழகிரி) பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.