பி.இ. ஆன்லைன் கலந்தாய்வில் முதல் சுற்று மாணவர்களுக்கான இடங்கள் தேர்வு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்தத் தற்காலிக ஒதுக்கீட்டை, மாணவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க 1லட்சத்து 1,692 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
முதல் சுற்றில், தரவரிசை 1 முதல் 9872 வரை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 3-ஆம் தேதி முதல் முன்வைப்புத் தொகையைச் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். திங்கள் முதல் புதன்கிழமை வரை இடங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதை அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர், அவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு சனிக்கிழமை வெளியிடப்படும். உடனடியாக இணையதளத்திலிருந்து தங்களுக்கான நிரந்தர ஒதுக்கீடு ஆணையை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்யாத மாணவர்களின் கேட்பு முதல் சுற்றில் நிராகரிக்கப்பட்டு, இரண்டாவது சுற்றுக்கு கொண்டு செல்லப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22351014, 22351015, 22350523, 22350527, 22350529 ஆகிய தொலைபேசி எண்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.