தங்கத்தின் விலை வியாழக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.26,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பல்வேறு காரணங்களால் கடந்த மாதத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் ஜூன் 25-ஆம் தேதி பவுன் ரூ.26,424 உயர்ந்து உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, இறக்கத்தை சந்தித்தாலும், கடந்த 5-ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.26,552-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 11) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.26,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து, ரூ.3,330-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.41.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.41,300 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: அமெரிக்காவில் இரண்டு நாள்கள் நடைபெற்ற ஃ பெடரல் வங்கி கூட்டமைப்புக் கூட்டத்தின் முடிவில் வைப்பு நிதியின் வட்டியை உயர்த்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இது முதலீட்டாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால், அடுத்த வாரத்தில் பவுன் தங்கம் ரூ.27 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,330
1 பவுன் தங்கம் 26,640
1 கிராம் வெள்ளி 41.30
1 கிலோ வெள்ளி 41,300