மதுரை அம்பலக்காரன்பட்டி கிராமத்தில் புதிய தொழிற்பேட்டை ரூ.18.80 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் பென்ஜமின் வெளியிட்ட அறிவிப்பு:
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அம்பலக்காரன்பட்டி கிராமத்தில் சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை சிட்கோ நிறுவனத்தின் மூலம் ரூ.18.80 கோடி திட்ட மதிப்பில் உருவாக்கப்படும்.
இந்தத் திட்ட மதிப்பில் குறு, சிறு நிறுவனங்கள் - குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மைய அரசின் பங்கு 60 சதவீதமாகவும், சிட்கோ நிறுவனத்தின் பங்கு 40 சதவீதமாகவும் இருக்கும்.
இந்தத் தொழிற்பேட்டையை உருவாக்குவதன் மூலம் அங்கு தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க வசதி செய்யப்படுவதன் வாயிலாக அந்தப் பகுதி இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.