அஞ்சல் துறை தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அஞ்சல் துறை தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிலையில், இனி வரும் காலங்களில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அஞ்சல் துறை கடந்த 11-ஆம் தேதி அறிவித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்துதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ரவிச்சந்திர பாபு, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நாளை நடைபெறும் தேர்வை நடத்துவதற்கு தடையில்லை. ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது. அஞ்சல் துறை தேர்வில் தமிழ் தவிர்க்கப்பட்டது ஏன்? இதுகுறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.