ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுத்தும் செயல் என ராட்சசி' படம் குறித்து ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் இளமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி' திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப் பூசுகிறது. அந்தப் படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்களை எழுதியுள்ளனர். பெற்றோர் மத்தியில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்தால் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன்வருவார்கள்?
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க செய்வது அரசுப் பள்ளி ஆசிரியர்களே.
முற்போக்கு சிந்தனை படைத்த இயக்குநர் கல்வியினை அரசே ஏற்று நடத்தவேண்டும் என ஏன் வலியுறுத்தவில்லை? அரசுப் பள்ளிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள ராட்சசி' படத்தினை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.