திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு எதிராக திருவல்லிக்கேணி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், சில கருத்துகளைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கோவை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா, தமிழகத்தில் நக்ஸலைட், மாவோயிஸ்ட் அமைப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்த வேண்டாம்' எனப் பேசினார்.
இதுதொடர்பாக நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸார் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரதிராஜா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த மனு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.