கம்பம்: தேக்கடி ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தில் வாடகை ஜீப் கார்களை நிறுத்துவதற்கு கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்ததால், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வாடகை ஜீப் ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேக்கடி ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தில், குமுளியில் உள்ள வாடகை ஜீப் கார்களை நிறுத்தவிடாமல் கேரள வனத் துறையினர் வியாழக்கிழமை முதல் அனுமதி மறுத்தனர். இதனால், குமுளி வாடகை ஜீப் கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர், இரண்டாவது நாளாக தேக்கடி சாலையில் அமர்ந்து தேக்கடி ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதவாறு மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற் சங்கத்தினரும் ஈடுபட்டனர்.
இது குறித்து கேரள வனத் துறையினரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குநர் விடுமுறையில் சென்றுள்ளார். அவர் வந்த பின்னரே போராட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும் என்றனர்.
இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றதால், தேக்கடிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால், தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.