பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முதலாம் எண் விஞ்ச்சுக்கான வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலை அடைய, படிப்பாதை தவிர 3 விஞ்ச் மற்றும் ரோப்கார் ஆகியன பயன்பாட்டில் உள்ளன. இதில், விஞ்ச் மற்றும் ரோப்கார் காலமுறை பராமரிப்புப் பணிகள் தவறாமல் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, முதலாம் எண் விஞ்ச் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. 40 நாள்கள் நடைபெற்ற பணியின்போது, ரூ. 20 லட்சம் செலவில் தேய்மானமடைந்த பாகங்கள், பழுதான பாகங்கள், உருளைகள் மற்றும் சாஃப்ட், பேரிங்குகள் உள்ளிட்டவை புதிதாக மாற்றப்பட்டன. மலை மேலே உள்ள விஞ்ச் நிலையத்திலும் மோட்டார்கள் சரிசெய்யப்பட்டன.
தற்போது இப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது. இதற்காக, விஞ்ச் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்புப் பூஜை மற்றும் தீபாராதனைகளை அர்ச்சகர்கள் நடத்தினர்.