சென்னை: புதிய வரைவு ‘தேசிய கல்விக் கொள்கை’ குறித்து ஆராய்ந்திட ஆய்வுக் குழு அமைக்க உள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் மும்மொழித்திட்டத்தை அறிவித்து - அதன் மூலம் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து- அந்த வரைவு கொள்கையில் உள்ள “இந்திதிணிப்பு” தொடர்பான வாசகங்களை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் ஏதாவது ஒரு வடிவில் இந்தி திணிப்பில் தீவிரமாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் கூட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி ஒதுக்கியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது.
இந்நிலையில் அன்னைத் தமிழ் மொழியாம் செம்மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி கல்வித்துறை வல்லுனர்களின் கருத்தினை அறிய திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
எனவே, இக்கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட தி.மு.க. சார்பில் பின்வரும் “ஆய்வுக் குழு” அமைக்கப்படுகிறது.
1. முனைவர் க.பொன்முடி, முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர்.
2. திரு தங்கம் தென்னரசு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
3. முனைவர் அ.இராமசாமி, முன்னாள் துணைத் தலைவர், தமிழக அரசு உயர்கல்வி மன்றம்.
4. முனைவர் ம.இராஜேந்திரன், முன்னாள் துணை வேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.
5. முனைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி.
6. திரு சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., கழக மாணவர் அணிச் செயலாளர்.
7. டாக்டர் ரவீந்திரநாத், சமூக நீதிக்கான மருத்துவர் சங்கம்.
8. பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுக் கல்விக்கான மாநில மேடை.
9. டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.,
வரைவு புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆராயும் இந்த “ஆய்வுக் குழு” பத்து நாட்களுக்குள், தனது அறிக்கையினை தலைமைக் கழகத்திடம் அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.