காமராஜரின் 117 ஆவது பிறந்த நாள் விழா, அவரது சொந்த ஊரான விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (ஜூலை 14, 15) கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) விருதுநகர் கே.வி.சாலா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கலைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திரபாலாஜி, க.பாண்டியராஜன் மற்றும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள், கலை போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காமராஜர் நினைவு இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குகின்றனர். மேலும், அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு காமராஜரின் பெருமைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தை பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஜோதிமணி, அதிமுக அமைப்புச் செயலர் பி.எச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதை தொடர்ந்து கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மேலும், திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ். தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காமராஜர் பற்றிய பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல்ராஜ் பரிசுகள் வழங்க உள்ளார். அதே போல், திங்கள்கிழமை இரவு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்துள்ளார்.