
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க திமுக சார்பில் ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
செம்மொழித் தமிழுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கல்வித் துறை நிபுணர்களின் கருத்தை அறிய திமுக விரும்புகிறது. எனவே, இந்த வரைவு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.
முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக உயர் கல்வி மன்ற முன்னாள் துணைத் தலைவர் அ.ராமசாமி, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணசாமி, திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சமூக நீதிக்கான மருத்துவர் சங்க நிர்வாகி ரவீந்திரநாத், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் ஆகிய 9 பேரைக் கொண்ட இந்த ஆய்வுக் குழு 10 நாள்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், திமுகவின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G