37 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்?: ஹிந்தி எதிர்ப்பு குறித்து திமுகவுக்கு முதல்வர் கேள்வி

ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் விவகாரத்தில் திமுகவைவிட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு அதிகம் உள்ளது. அதிமுகவில் 37 எம்.பி.க்கள் இருந்தபோது என்ன சாதனை செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினீர்கள்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தபால்துறை தேர்வில் தமிழ்மொழி இடம் பெறுவது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தபால்துறை தேர்வில் தமிழ்மொழி இடம் பெறுவது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் விவகாரத்தில் திமுகவைவிட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு அதிகம் உள்ளது. அதிமுகவில் 37 எம்.பி.க்கள் இருந்தபோது என்ன சாதனை செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினீர்கள். அதே கேள்வியைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம் என்று சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.               
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பினார். இந்தப் பிரச்னையில் அரசின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தனர். இதனிடையே, இந்தப் பிரச்னையில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பேரவையில் தெரிவித்த கருத்துகள்:-
முதல்வர் பழனிசாமி: தபால் துறை தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற சூழலை உருவாக்கவும், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும் பேரவையில் கோரிக்கைகளை எழுப்பியதாகத் தெரியவில்லை. திட்டமிட்டு வேண்டுமென்றே வெளிநடப்புச் செய்திடும் நோக்கத்தில் திமுகவினர் நடந்துள்ளனர். அதிமுகவில் 37 எம்.பி.க்கள் இருந்தபோது என்ன சாதனை செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினீர்கள். அதே கேள்வியைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம். மத்திய அரசு தொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை அங்கே அனுப்பி வைத்துள்ளார்கள்.
ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் திமுகவினருக்கு உள்ள உணர்வைப் போன்றே எங்களுக்கும் நூறு மடங்கு உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சி எம்.பி.,க்களை குரல் எழுப்பச் சொல்லுங்கள். நாங்களும் தொடர்ந்து குரல் எழுப்புவோம். இந்தப் பிரச்னையில்  மத்திய அரசு என்ன முடிவை  எடுக்கிறது என்று பார்ப்போம் என்றுதான் துணை முதல்வர் தெரிவித்தார். அதில் என்ன வேறுபாடு இருக்கிறது. ஒரு நாள் வரை பொறுத்திருக்க மாட்டீர்களா. அதற்குள் என்ன அவசரம்? 
அமைச்சர் டி.ஜெயக்குமார்: பேரவையில் தீர்மானம் எனக் கூறி திமுகவினர் போகாத ஊருக்கு வழி சொல்கிறார்கள். இந்தப் பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட வெளிநடப்புச் செய்துள்ளனர்.
(இதனிடையே, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்ய முயன்றனர். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டார்.)
ஓ.பன்னீர்செல்வம்: இருமொழிக் கொள்கைதான் எங்களது நிலைப்பாடு என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அறிவிக்கத் தயாரா? 
காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் தபால் துறை தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
(இதன்பின், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்)
சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: தபால் துறை தேர்வு விவகாரத்தில் எந்த அவசரமும் கொள்ளத் தேவையில்லை. தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடையாணை பிறப்பித்துள்ளது. நாளையே முடிவுகள் வெளியாகி, யாரும் பணியில் சேர்ந்து விடுவார்கள் என்ற நிலை இல்லை. 24 மணி நேரத்துக்குள் பொறுக்க முடியாதவர்களுக்கு தமிழில் தேர்வு நடத்தக் கூடாது என்பது நோக்கமா?  மத்திய அரசைக் கண்டித்து ஏதாவது தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கமா?  என்பது தெரியவில்லை. தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் கோரிக்கைகளை வைக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி அதில் குளிர்காயலாமா எனப் பார்க்கிறார்கள். அது எதுவும் பலிக்காது. 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நீடித்து நிலைத்து இருக்கும். அதேசமயம், தமிழர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கக் கூடிய திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து எதிர்த்திடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com