சென்னை: நீட் விலக்கு மசோதா 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்வு இருந்து விலக்கு கோரும் மசோதாவானது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
அப்போது நீட் விலக்க மசோதாவானது நிராகரிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றும், அதை ஆளும் அதிமுக அரசு மறைத்து விட்டது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆனால் இதனை உறுதியாக மறுத்த அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த மசோதா நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது; நிராகரிக்கப்படவில்லை என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் மத்திய உளத்தூரை செயலர் வைத்யா சார்பில் செவ்வாயன்று பதில்மனு தாக்கல் செயயப்பட்டது. அதில், ' 2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு 2017 செப்டம்பர் 22ம் தேதியன்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறிய தகவல் உண்மையென்றால் ராஜிநாமா செய்யத் தயார் என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.