உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை அவகாசம் கோரி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குரைஞர் சி.ஆர். ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறுப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் தாமதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் அல்ல.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்தியதன் காரணமாக உருவான சூழல்தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கைக்கான முன்னேற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும், மேற்கண்ட காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிக்கையை வெளியிடுவதற்கு மேலும் 60 நாள்கள் கால தாமதமாகும். எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை அவகாசம் தேவை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.