கொடைக்கானலில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரலும், மிதமான மழையும் பெய்தது. அதிலும் கடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானல், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இது, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்டவைகளின் விளைச்சலுக்கு ஏற்ற மழையாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் கொடைக்கானல் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருந்து வந்தது. கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையின் காரணமாக நீரோடைப் பகுதிகளிலும், நீர்வரத்து பகுதிகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சற்று குடிநீர் பிரச்னை குறைந்துள்ளது.