பைக்காரா படகு இல்லத்தில் மிதவை படகு தளம் புதுப்பிக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் அறிவித்தார்.
சட்டப்பேரவை திங்கள்கிழமை சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா படகு இல்லத்தில் ஏரி நீரின் அளவு அவ்வப்போது மாறுபடுவதன் காரணமாக மிதவை படகுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் படகு இறங்கு தளமானது தற்போது சேதமடைந்துள்ளது. எனவே, இந்த மிதவை படகு தளம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
சிதம்பரத்தில் புதிய சுற்றுலா அலுவலகம் ரூ.60 லட்சத்தில் கட்டப்படும். கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் 14 அறைகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். திருச்சி ஹோட்டல் தமிழ்நாட்டில் 10 அறைகள் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மதுரை ஹோட்டல் தமிழ்நாட்டில் 10 அறைகள் ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்படும் என்றார்.