சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
சிலைக் கடத்தல் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் காதர்பாட்சா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக என் மீது பொய் வழக்குகளை பொன் மாணிக்கவேல் பதிவு செய்தார். அந்த வழக்கில் இருந்து நான் ஜாமீன் பெற்றேன். ஆனால், என்னை மற்றொரு பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தையும் பொன் மாணிக்கவேல் தவறாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி, சிபிசிஐடி டிஜிபி ஆகியோரிடம் புகார் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நோட்டீஸ்: இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக வரும் ஜூலை 24-ஆம் தேதிக்குள் தமிழக உள்துறைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தார்.