விருதுநகர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் மண்டபத்தை அவர் திறந்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
காமராஜரை சிறப்பிக்கும் வகையிலும், அவரது சாதனைகள், மக்கள் நலத் திட்டங்களை எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளவும் மணிமண்டபம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விருதுநகர் நுழைவாயிலில் சுமார் 12 ஏக்கர் பரப்பில் காமராஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முற்றத்தில், மாணவ-மாணவிகளை இருபக்கமும் பாசத்தோடு அணைத்துக் கொண்டிருக்கும் வகையில் முழு உருவ வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 அடி உயரம் கொண்ட அணையா தீபம், செயற்கை நீருற்று போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மணிமண்டப வளாகத்தில் மலர் தோட்டம், உணவகம், காமராஜர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரி வடிவம், மாநாட்டுக் கூடம், தியான மண்டபம் ஆகிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன. மணிமண்டபத் திறப்பு நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திரபாலாஜி, க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.