பொது போக்குவரத்தின் அளவு குறைந்ததால் தமிழகத்தில் 1,412 பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம்:
சபா ராஜேந்திரன் (திமுக): தமிழகத்தில், இப்போது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 1.74 கோடியாக உள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில் 2.05 கோடியாக இருந்தது. சுமார் 31 லட்சம் பயணிகள் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை குறைவால் நாளொன்றுக்கு ரூ.8 முதல் ரூ.9 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு, ஆண்டுக்கு இது ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்ந்து நிற்கிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர்: கடந்த 1944-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 239 பேருந்துகள் அரசுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன்பின், திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்டு போக்குவரத்துத் துறையானது, பொது நிறுவனமாக மாற்றப்பட்டது. இதிலிருந்து சிறிது சிறிதாக இழப்பு ஏற்படத் தொடங்கியது. இப்போது, பயணிகள் கட்டணத்தில் இருந்து ரூ.90 கோடி அளவுக்கு எடுத்து ஊழியர்களுக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் 21 ஆயிரத்து 154 பேருந்துகளும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 23 ஆயிரத்து 78 பேருந்துகளும், இப்போது 21 ஆயிரத்து 183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையில் 7.9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும், பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தும் அளவும் குறைந்துள்ளன. இதனால் 1, 412 பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது என்றார்.