திருப்பூர் அருகே ஈமச் சடங்குக்குப் பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டு, தங்கையிடம் ஈமச் சடங்கு செய்வதற்குத் தேவையான பணத்தையும் கொடுத்துவிட்டு 3 பேர் ஒரே வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து மங்கலம் காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மங்கலம் பகுதியில் உள்ள சின்னகாளிபாளையத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (70). இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (39), மகள்கள் செல்வி (42), சாந்தி.
இந்நிலையில், செல்வியின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் துரைராஜ், கோபாலகிருஷ்ணன், செல்வி ஆகிய மூவரும் மனவேதனையுடன் காணப்பட்டனராம். கோபாலகிருஷ்ணன் இடுவாயில் உள்ள தனது தங்கை சாந்தி வீட்டுக்கு திங்கள்கிழமை (ஜூலை 15) காலை சென்று அவரிடம் ரூ. 30 ஆயிரத்தையும், வீட்டுப் பத்திரத்தையும் கொடுத்துள்ளார். அப்போது அவர், இந்தப் பணம் உங்களுக்குத் தேவைப்படும் என்று கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், துரைராஜ் வீடு திங்கள்கிழமை சாத்தப்பட்டிருந்தது. வீட்டுக்கு அருகில் வசிக்கும் அங்கம்மாள் (90) திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் துரைராஜ், கோபாலகிருஷ்ணன், செல்வி ஆகிய மூன்று பேரும் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அங்கம்மாளின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். துரைராஜ், கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் இறந்துகிடந்தது தெரியவந்தது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த செல்வியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வி செவ்வாய்க்கிழமை உயிரிந்தார்.
ஈமச் சடங்கு செய்வதற்கான செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.