சிகரெட் அட்டைகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதுபோல உணவுப் பொட்டலங்களிலும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா ஆலோசனை கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பூங்கோதை பேசியது:
தொற்றா நோயால் ஏற்படும் மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இதய நோய், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், மனநோய் போன்ற நோய்ப் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. நோய்களை வரும் முன் தடுப்பது அவசியம். அதனால், சுகாதாரக் கல்வியையும், நோய் தடுப்புக் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
உணவுகள் மூலமும் நோய் ஏற்படுகின்றன. அதனால், சிகரெட் போன்றவற்றில் எச்சரிக்கை வாசகம் இருப்பதுபோல, உணவுப் பொருள்களை விற்கும்போது, அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: எல்லோரும் உணவு ருசியாகச் சாப்பிட வேண்டும் என்றுதான் கடைக்குப் போகின்றனர். இதுபோல் எல்லாம் போட்டால் சாப்பிடுவார்களா எனத் தெரியவில்லை. ஆனால், வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் உறுப்பினர் கூறினார். நல்ல அறிவுரைகளாக இருந்தால் அரசு ஏற்று செயல்படுத்தும்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: கல்விக்காக ஒரு தொலைக்காட்சியை விரைவில் தொடங்க உள்ளோம். அதில், சுகாதாரக் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கிராமப்புறங்களிலும் மருத்துவ முகாம் நடத்துகிறோம். அதன் மூலம் கிராமப்புற மக்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மூலமாகவே சிகிச்சை அளிக்கிறோம். நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.