தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிடக் கோரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்கும் தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளர் சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிர்த்து, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதேபோன்று ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், விஷால் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் தரப்பில், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் வேறு நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளன. எனவே, தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட வேண்டும்.
அதன்பின்னர் இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும், வேறு நீதிபதி முன்பாக விசாரணைக்குப் பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.