மாற்றுத் திறனாளிகளுக்காக பேருந்துகளில் சக்கர நாற்காலி தூக்கி வசதி
மாற்றுத்திறனாளிகளுக்காக அரசுப் பேருந்துகளில் சக்கர நாற்காலி தூக்கி வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:
நேரடிப் பணப் பரிமாற்றங்கள் வெகுவாகக் குறைந்து வரும் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில், பொதுமக்கள் மற்றும் பயணிகள் விரும்பத்தக்க வகையில் அனைத்து வகையான பயண முறைகளுக்குப் பயன்பெறும் வகையிலும் மற்றும் பணம் கையாளுதல் சிக்கலை நீக்கும் வகையிலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை அடிப்படையில் பொது இயக்கப் பயண அட்டை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
கொடைக்கானல் சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளதால் விடுமுறை நாள்கள் மற்றும் கோடைக் காலங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக கொடைக்கானலில் அடுக்குமாடி சீருந்து நிறுத்தம் ரூ.20 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் பேருந்து பயணத்தை எளிதாக்கும் விதமாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக முதல் கட்டமாக 25 பேருந்துகளில் ரூ.61.25 லட்சம் மதிப்பீட்டில் மின் உதவியுடன் நீராற்றலால் இயங்கும் சக்கர நாற்காலி தூக்கி வசதி செய்து தரப்படும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள 322 பணிமனைகளில் பேருந்துகளின் பராமரிப்பு நடவடிக்கையினைக் கண்காணிக்க மாநில அளவில் ஒரு மையக் கட்டுப்பாட்டு அறையை நிறுவி ரூ.2 கோடி மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் இயக்குநரகம் மற்றும் அரசு தானியங்கி பணிமனைகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கணினிமயமாக்கப்படும் என்றார்.