இறந்தவரின் உடலை மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சட்டச் சிக்கல் இருப்பதாக பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பரமசிவம் பேசியது:
108 ஆம்புலன்ஸ் வசதியை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதில்லை. மின் விளக்குகள் இல்லாத காலத்தில் வேண்டுமானால், மாலை 6 மணிக்கு மேல் செய்யாமல் இருந்திருக்கலாம். இப்போது நல்ல வெளிச்சம் கொடுக்கக்கூடிய விளக்குகள் உள்ளன. அதனால், மாலை 6 மணிக்கு மேலும் பிரேதப் பரிசோதனை செய்து உடலைக் கொடுக்கலாம். கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் உடலை வாங்குவதற்காக இரவு முழுவதும் காத்திருக்கும் மக்களைப் பார்க்கிறோம் என்றார்.
அப்போது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறுக்கிட்டு கூறியது:
தனியார் மருத்துவமனைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் கொண்டு செல்லலாம். அதேசமயம், ஆம்புலன்ஸ் வசதியைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம். மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட உடல், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, பிரேதப் பரிசோதனையை மாலை 6 மணிக்குமேல் செய்து, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றார்.