கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்

கொலை வழக்கில் தண்டனை பெற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.
கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்


சென்னை: கொலை வழக்கில் தண்டனை பெற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் இன்று உயிரிழந்தார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் உதவியோடு வந்து நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ராஜகோபால். இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உயர் சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று ராஜகோபாலின் மகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை இடம் மாற்றுவது உட்பட, அவரது மருத்துவ செலவு என அனைத்துக்கும் மகனே பொறுப்பு என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் காவல்துறை பாதுகாப்புடன் ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார், மர்ம நபர்களால் கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீஸார் சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2004-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்களுக்கும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து, ராஜகோபால் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ராஜகோபால் உள்ளிட்டோருக்கு தண்டனையை அதிகரிக்கக் கோரி போலீஸார் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹோட்டல் அதிபர் ராஜகோபால், மேலாளர் டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசி விசுவநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலு மற்றும் ஜனர்த்தனன் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டணையும் விதித்து கடந்த 2009-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

இந்தத் தண்டனையை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்த உச்சநீதிமன்றம், ஜூலை 8-ஆம் தேதிக்குள் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் தவிர 9 பேர் சென்னை 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 8) சரணடைந்தனர். 

மேலும், உடல்நலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் கோரி ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனுக்களை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ராஜகோபால், அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜனார்த்தனன் ஆகியோர் சென்னை 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தானேந்திரன் முன் ஆஜராகி சரண் அடைந்தனர். அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்ட நீதிபதி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறைத்துறை வார்டில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். 

ஆம்புலன்ஸ் மூலம்.......:  நீதிமன்றத்தில் சரண் அடைய சரவணபவன் அதிபர் ராஜகோபால், பணியாளர் ஜனர்த்தனன் ஆகியோர் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றம் வந்தனர். ராஜகோபாலுக்கு சுவாசக் குழாய் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. 

அப்போது ராஜகோபால் தரப்பு வழக்குரைஞர்கள் முத்துக்கண்ணையன், கணேசன் ஆகியோர் 3 ஆவது தளத்தில் உள்ள நீதிமன்ற அறையில் இருவரையும் ஆஜர்படுத்துவதில் சிரமம் உள்ளதாகவும், மாற்று ஏற்பாடுகளைச் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவரையும் 3-ஆவது தளத்துக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

ராஜகோபால் ஸ்டெரச்சர் மூலமாகவும், ஜனார்த்தனன் வீல் சேர் உதவியுடனும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ராஜகோபாலை லிஃப்ட் மூலம் கொண்டு செல்ல முடியாததால், அவரது உறவினர்கள், ஹோட்டலில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் சேர்ந்து படிக்கட்டுக்களில் ஸ்டெச்சரைத் தூக்கிச் சென்றனர். அப்போது தனக்கு வலி ஏற்படுவதாக ராஜகோபால் சப்தமிட்டார்.

கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் உணவக உரிமையாளர் பி. ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் அவகாசம் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. 

உடல்நிலையைக் காரணம் காட்டி சரணடைவதிலிருந்து சிறிது காலம் விலக்குக் கோரி ராஜகோபால் சார்பிலும், தண்டனை காலத்தில் திருத்தம் செய்யக் கோரி ஜனர்தன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, ராஜகோபாலின் உடல்நிலையைக் காரணம் காட்டி சரணடைய கூடுதல் அவகாசம் கோரினார். அதற்கு நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், ராஜகோபாலின் உடல்நிலை குறித்து வாதங்களில் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறி, கோரிக்கையை நிராகரித்தனர்.மேலும், ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com