
அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இணையதளங்கள், சமூக ஊடகங்களான முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் சமூக ஊடகங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, தமிழக காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவு தனியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த ஜூன் மாதம் சைபர் குற்றப்பிரிவுக்கு தனியாக ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதன் அடுத்தகட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், 6 மாவட்டங்களில் சைபர் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.
இவற்றில் பணியாற்ற ஆர்வமுள்ள காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சைபர் குற்ற வழக்குகளை கையாளுவதற்கும், விசாரணை செய்வதற்குரிய தகுதியும் திறனும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு ஆர்வமுள்ள காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், இப் பணிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் வரும் 26-ஆம் தேதிக்குள் ஸ்ரீஸ்ரீஜ்.ஜ்ண்ப்ப்ண்ய்ஞ்ய்ங்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு திரிபாதி தெரிவித்துள்ளார்.