
பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட அறிவிப்பு:
பத்திரிகையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப உதவி நிதியுடன், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் வீட்டுமனை, அரசு வாடகை குடியிருப்பு ஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளனர்.
அதனால், பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மைச் செயலாளரை (நிதித்துறை) தலைவராகக் கொண்டு குழு ஒன்று அமைக்கப்படும். குழுவில் செயலாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளரும், உறுப்பினர்களாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் இருப்பர்.
இந்தக் குழுவிடம் இருந்து பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அறிக்கை பெறப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.