ஆம்னி பேருந்துகளில் தூங்கும் வகையிலான படுக்கை வசதிகளுக்கு வரி விதிப்பதற்கான சட்ட மசோதாவை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேரவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
மசோதா விவரம்:
1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்க ஊர்திகள் வரி விதிப்புச் சட்டத்தின்படி ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும்போது பயணிகள் தூங்குவதற்கான படுக்கை வசதியுடன் கூடிய பயன்பாடு மற்றும் தூங்குவதற்கான இருக்கையுடன் கூடிய பயன்பாட்டுக்கு வரி விதிக்க வழிவகை ஏதும் இல்லை.
இதை மாற்றியமைப்பதற்காக தமிழ்நாடு சட்டம் 1974-இல் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆம்னி பேருந்தில் தூங்குவதற்கான படுக்கை வசதிக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.4 ஆயிரமும், தூங்குவதற்கான இருக்கை வசதிக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.3 ஆயிரமும் வரி விதிக்கப்பட உள்ளது.
ஆம்னி பேருந்துகளில் சுற்றுலா பயன்பாடுகளுக்காக 7 நாள்களுக்கு தற்காலிக உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு தூங்குவதற்கான இருக்கை ஒன்றுக்கு ரூ.800-ம், படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.1,000-ம் வசூலிக்கப்படும்.
7 நாள்களில் இருந்து 30 நாள்களுக்கு மேற்படாத தற்காலிக உரிமம் பெற்ற பேருந்துகளில் இருக்கை ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும், படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.2,500- ம் வசூலிக்கப்படும். 30 நாள்களில் இருந்து 90 நாள்களுக்கு மேற்படாத தற்காலிக உரிமம் பெற்ற பேருந்துகளில் இருக்கை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், படுக்கை ஒன்றுக்கு ரூ.5,500-ம் வசூலிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு: இந்த வரி விதிப்பின் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.