செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் கருணாநிதி விருது விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தாயகம் கவி பேசியது:
கருணாநிதி தன்னுடைய சொந்த நிதியாக ரூ.1 கோடி கொடுத்து, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் விருது அளிப்பதற்காக நடவடிக்கையை எடுத்தார். ஆனால், அந்த விருது அளிக்கப்படுவதே இல்லை என்று கூறினார்.
அப்போது, அமைச்சர் க.பாண்டியராஜன் குறுக்கிட்டு கூறியது:
ரூ.1 கோடி கருணாநிதி சொந்த நிதி கொடுத்து, அதன் வட்டியில் இந்த விருது கொடுக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால், 2009-இல் திமுக ஆட்சியில் இருந்தே இந்த விருது கொடுக்கப்படவில்லை.
இந்த விருதைக் கொடுப்பதற்காக கருணாநிதி விதித்துள்ள விதிமுறைகளுக்கு உள்பட்டவரைத் தேடுவது மிகவும் சிரமமாக உள்ளது. இன்னும் 3 மாதங்களில் விருதுக்கு உரியவரைக் கண்டறிந்துவிடுவோம். விரைவில் விருது வழங்கப்படும் என்றார்.