வேலூர் கோட்டையை திமுகவின் வெற்றிக் கோட்டையாக்கிட வேண்டும் என்று, தொண்டர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு பழிபோட்டு முடக்கப்பட்டதுதான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். அதேபோன்ற புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றைத் தொகுதியில் மட்டும் சொற்ப வித்தியாசத்தில் அதிமுகவினால் வெற்றி பெற முடிந்தது.
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கூட்டணி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மும்மொழி திட்டத்தை எதிர்த்து நாடெங்கும் எதிரொலிக்க குரல் கொடுத்தனர்.
அஞ்சல் துறைத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு அவையே அதிரும்படி எம்பி.க்கள் எழுப்பிய உரிமைக் குரலால், அந்தத் தேர்வே ரத்து செய்யப்படும் நிலை உருவாகி, மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அதிமுக என்ன செய்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு நிராகரித்ததையே வெளிப்படுத்தாமல், மறைத்துவைத்து மன்னிக்க முடியாத துரோகத்தை அதிமுக அரசு செய்துள்ளது.
திமுகவின் மீது மீண்டும் ஏதாவது அவதூறு பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் திமுகவின் பக்கமே இருக்கின்றனர்.
வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட திமுகவினர் அனைவரும் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.