சென்னை: மத்திய அரசின் சூழ்ச்சிகரமான 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால் வாக்கு வங்கிக்காகவும், பாஜக கொண்டிருக்கும் சமூக நீதி, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவாத கொள்கையின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சட்டத்தை அவசர கதியில் கொண்டு வந்தனர். இச்சட்டம் சமுக நீதிக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று கூறினோம். இச்சட்டம் இடஒதுக்கீட்டின் அர்த்தத்தை மழுங்கடித்து சமுக நீதியை குழிதோண்டி புதைத்து விடுமென்று எச்சரித்திருந்தோம். ஸ்டேட் வங்கி கிளர்க் தேர்வின் முடிவும் அதை உறுதிபடுத்தியிருக்கிறது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசக்கூடியவர்கள் தகுதியற்ற, திறமையற்றவர்களே இடஒதுக்கீட்டை பயன்படுத்தி வேலைக்கு வந்து விடுகிறார்கள் என்று காற்றில் புழுதிவாரி தூற்றுவார்கள். ஆனால், தேர்வின் முடிவுகள் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினருக்கான
கட் ஆஃப் மதிப்பெண்ணை விட பாதிக்கும் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்ணை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது எவ்வளவு மோசடித்தனமானது என்று வெட்ட வெளிச்சமாகி விட்டது.
மத்திய அரசின் சூழ்ச்சிகரமான 10% இடஒதுக்கீடு சட்டத்தால் இனி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் சமூக நீதிக்கு எதிரான இந்த அநீதி தொடரப்போகிறது. மத்திய அரசின் சூழ்ச்சியில் சமூக நீதியை பாதுகாக்க அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.