சென்னை: சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்று தமிழக அமைச்சர்கள் இருவர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவரான பொன் மாணிக்கவேல், புதனன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் சிலை கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்று தமிழக அமைச்சர்கள் இருவர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் யாருடைய பெயர்களும் குறிப்பிடப்படாத நிலையில், தனியார் செய்தித் தொலைக்காட்சியொன்றில் தமிழக வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து வியாழன் மாலை செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும் கூட்டாக கூறியதாவது:
சிலைக் கடத்தலில் எங்களுக்கு தொடர்பு இல்லை. சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய்
பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில், எங்கள் பெயரைக் குறிப்பிட்டு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி பொய் பரப்புரை செய்து வருகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எங்கள் மீது திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொய்யான செய்தியால் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனவே அந்த தொலைக்காட்சி மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.